வாக்காளர் பெயர் சேர்க்கும் இறுதி வாய்ப்பு...! - தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்...!
Last chance add your name voter list Special camps across Tamil Nadu
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision – சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கை கடந்த மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் 19-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
வரைவு பட்டியல் வெளியான பிறகு, தங்களது பெயர்கள் பட்டியலில் விடுபட்டுள்ளதாக பலரும் புகார் எழுப்பிய நிலையில், அந்த குறைகளை தீர்க்கும் வகையில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை எளிதாக சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதேபோல், ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இந்த முகாம்களில், 18 வயது நிறைவடைந்தும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியுள்ளவர்கள், உறுதிமொழி படிவத்துடன் படிவம்–6 மூலம் தங்களின் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், புதிய சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது தவறாக இடம்பெற்ற பெயரை நீக்கவோ, படிவம்–7 மூலம் விண்ணப்பிக்க முடியும்.
அதேபோல், முகவரி மாற்றம், பெயர் அல்லது பிற விவரங்களில் திருத்தம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம், மாற்றுத்திறனாளி வாக்காளராக பதிவு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளவர்கள் படிவம்–8 மூலம் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் மட்டும் 4,079 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. வாக்காளர்கள் அருகிலுள்ள முகாம்களை அணுகி, உரிய படிவங்களை சமர்ப்பித்து இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
English Summary
Last chance add your name voter list Special camps across Tamil Nadu