கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழை! மாணவர்களின் நிலையை கண்டு கண்ணீர் சிந்தும் பொதுமக்கள்!
kodaikanal due to heavy rain students worry went to school
திண்டுக்கல், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே மேயர் பாயிண்ட், குணா குகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட வனத்துறைக்கு கட்டுப்பட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 2 வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் நகர் மற்றும் மலை கிராம பகுதிகளில் நேற்று இரண்டாவது நாளாக கனமழை பெய்ததால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவுகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மேல்மலை, கீழ் மலைப்பகுதிகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேல்மலை கிராமம், பூம்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி ஊருக்கு வெளியே 6 கிலோமீட்டர் தூரம் தள்ளி இருப்பதால் அரசு பேருந்து மூலம் ஏராளமான மாணவ, மாணவிகள் செல்கின்றனர்.
இந்நிலையில் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதிக்கு வரும் அரசு பேருந்து நிறுத்தப்பட்டது.
காலாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில் மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்ல பெரிதும் சிரமம் அடைகின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் தனியார் லாரிகளில் ஏறி மாற்று வழி மூலம் பள்ளிக்குச் சென்றனர்.
ஒரு சில மாணவர்கள் கூட்ட நெரிசலின் காரணமாக லாரியில் செல்ல மறுத்துவிட்டனர். இதனால் மேல்மலை கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
kodaikanal due to heavy rain students worry went to school