கீழடி அகழாய்வு: அக்காலத் தமிழர்களின் முக அமைப்புகள் வெளியீடு!
Keezhadi Excavation
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் அகழாய்வுப் பணிகள், தமிழ் நாகரிகத்தின் தொன்மையைப் புதியளவுக்கு வெளிப்படுத்தி வருகின்றன.
கீழடியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள், கிமு 6ஆம் நூற்றாண்டளவில் தமிழர்கள் எழுத்தறியும், படிப்பறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. கரிமப் பகுப்பாய்வு (Carbon Dating) மூலம் பெற்ற காலக்கணக்கீடு அடிப்படையில், இந்த விடயம் முதன்முறையாக நிரூபிக்கப்பட்டது. இதனைப் பொது மக்களுக்கு விளக்கும் வகையில் நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கீழடியில் அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட மனித மண்டை ஓடுகளை அடிப்படையாக கொண்டு, அக்காலத் தமிழர்களின் முக அமைப்புகள் 3D தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் உள்ள ஆய்வகத்தில், 80% அறிவியல் மற்றும் 20% கலைச் செயல்முறைகளை கொண்டு இரு முக வடிவங்கள் சோதனை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மண்டை ஓடுகள் கொந்தகை பகுதியில், 800 மீட்டர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டவை. ஆய்வாளர்கள் கணிப்பின்படி, அப்பகுதியில் வாழ்ந்த ஆண்கள் சுமார் 5.7 அடி மற்றும் பெண்கள் 5.2 அடி உயரமுடையவர்களாக இருந்திருக்கலாம். பெரும்பாலான எலும்புக்கூடுகள் 50 வயதுடையோருக்குச் சேர்ந்தவையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த எலும்புக்கூடுகளின் DNA பகுப்பாய்வை மேற்கொண்டு, அவர்கள் எந்த பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கீழடி தொடர்பான 982 பக்க அறிக்கையை அகழாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளாலும், அதனை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் வழங்காதது, தொடரும் சர்ச்சையாகியுள்ளது.