கரூர் துயரம்: ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை!
Karur Tragedy Rs. 50 lakh compensation must be provided Thirumavalavans appeal
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவே கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இந்த துயரகரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
கடும் நெரிசலில் சிக்கி மிதிபட்டு மூச்சுத் திணறி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது ஆற்றவொண்ணாப் பெருந்துயரமாகும்.
மேலும், பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் கவலையளிக்கிறது. அவர்கள் அனைவரையும் காப்பாற்றும் வகையில் உயர் சிகிச்சை அளித்திட தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளைப் போர்க்காலச் சூழலின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவிப்பு செய்துள்ளது. எனினும், அத்தொகையைக் குறைந்தது தலா ரூ.50 லட்சம் என வழங்கிட முன்வரவேண்டுமென முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். காயமடைந்தோர் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Karur Tragedy Rs. 50 lakh compensation must be provided Thirumavalavans appeal