கருணாநிதி நினைவு நூலகம் : ஜனவரி மாதம் திறப்பு..!
Karunanidhi Memorial Library open in january
மதுரையில் கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவு நுாலகத்தை, வரும் பொங்கல் பண்டிகையின் போது திறந்து வைக்கும் வகையில் கட்டிடப் பணியை விரைவுபடுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நினைவு நுாலகத்தை போன்று, மதுரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நுாலகம் கட்டும் பணி, ஜனவரி 1ல் துவங்கப்பட்ட நிலையில், அதற்காக 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டிடப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நூலகம் மொத்தம், 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டு பிரமாண்ட நூலகமாக அமைய உள்ளது. இதில் மொத்தம் ஆறு தளங்கள் அமைகிறது. முதல் தளம் 3,110 சதுர அடியில் குழந்தைகள் நுாலகப் பிரிவு, பருவ இதழ்கள், நாளிதழ்கள் பிரிவுகளும் இடம்பெறுகின்றன. இரண்டாம் தளத்தில், தமிழ் நுால்கள் பிரிவும்; மூன்றாம் தளத்தில், ஆங்கில நுால்கள் பிரிவும் அமைய உள்ளன.
நான்காம் தளத்தில், அமர்ந்து படிக்கும் வசதியுடன் கூடிய ஆங்கில நுால் பிரிவு அமையவுள்ளது. ஐந்தாம் தளத்தில் மின் நுாலகம், அரிய நுால்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நுால்கள் உள்ளிட்ட பிரிவுகள் அமையவுள்ளன.ஆறாம் தளத்தில், கூட்ட அரங்கு, நுால் கொள்முதல் பிரிவு, நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை அமையவுள்ளன. தற்போது இந்த நூலகத்தின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகையின்போது, மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாக களைகட்டும். இந்தப் போட்டிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். அப்போது, இந்த பிரமாண்ட நுாலகத்தையும் திறந்து, அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அவர் அர்ப்பணிக்க உள்ளதாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
Karunanidhi Memorial Library open in january