கார்த்திகை தீபத் திருவிழா - திருவண்ணாமலையில் நேற்று முதல் தொடக்கம்.! 
                                    
                                    
                                   karthikai deepam function start in thiruvannamalai temple
 
                                 
                               
                                
                                      
                                            திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மதம் உலகப் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் தீபத் திருவிழா காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நேற்று இரவு தொடங்கியது.
இதையடுத்து இன்று  பிடாரி அம்மன் உற்சவமும், நாளை விநாயகர் உற்சவமும் நடைபெற உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் எல்லை தெய்வ வழிபாட்டுக்குப் பிறகு மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் வருகிற 4-ந்தேதி காலை கொடியேற்றம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் ஆரம்பமாகிறது.

அதில், 6-ம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும் அன்று இரவு தங்கத் தேரோட்டமும் நடைபெறும். 7-ம் நாள் உற்சவத்தில் பஞ்ச ரத மகா தேரோட்டம் நடைபெறும். அன்று ஒரே நாளில் 5 தேர்கள் மாட வீதியில் வலம் வரும். 
காலையில் தொடங்கும் மகா தேரோட்டம் நள்ளிரவு வரை நடைபெறும். இந்தத் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கார்த்திகை தீபத் திருவிழா 13-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.
மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு காணலாம். இதையடுத்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெற்றதும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறும். அதற்கான பணிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       karthikai deepam function start in thiruvannamalai temple