'கடன் பாரத்தைத் தாங்க முடியலை'...! முழு பயிர்க்கடனை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நடத்திய அதிரடி நூதன போராட்டம்...!
Cannot bear burden debt Farmers staged radical and innovative protest demanding cancellation entire crop loans
நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் இன்று நடைபெற்ற நூதன போராட்டம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் திதி கொடுத்து எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த போராட்டத்துக்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விஜயராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவதில் மத்திய அரசு மவுனம் காக்கிறது என கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கடற்கரையில் திதி கொடுத்து, பின்னர் பிண்டங்களை கடலில் கரைத்தனர். அதன்பின் முழக்கங்கள் எழுப்பி மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். நாகை கடற்கரையில் நடைபெற்ற இந்த வித்தியாசமான போராட்டம் அப்பகுதியில் பெரும் கவன ஈர்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
English Summary
Cannot bear burden debt Farmers staged radical and innovative protest demanding cancellation entire crop loans