பக்தர்களின் பணத்தில் கோடி கோடியாக கொள்ளை...? அயோத்தியைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயில் அறக்கட்டளையை உலுக்கும் மெகா சர்ச்சை...!
Crores rupees looted from devotees money After Ayodhya mega controversy rocks Badrinath Temple Trust
அயோத்தி ராமர் கோவிலில் நன்கொடை முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பத்ரிநாத் கோவிலிலும் இதேபோன்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. இதையடுத்து கேதர்நாத்–பத்ரிநாத் கோவில் அறக்கட்டளை அவசர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தொகையில் கோடிக்கணக்கில் பணம் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.77.85 லட்சம் ரொக்கம், 11 கிராம் தங்கம், 375 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இந்த விசாரணையில், கண்காணிப்பு கேமரா குறைபாடுகளை பயன்படுத்தி காணிக்கை எண்ணும் அறையில் இருந்து பணம் திருடப்பட்டதாகவும், கோவில் வளாகத்திலுள்ள கழிப்பறையில் பதுக்கி வைத்து பின்னர் வெளியே எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடியில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற தகவலால் விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.இதற்கிடையில், பத்ரிநாத் கோவிலின் நன்கொடைகளிலும் முறைகேடு நடந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவியது. இதனால் கேதர்நாத்–பத்ரிநாத் கோவில் அறக்கட்டளை உடனடியாக விசாரணைக் குழுவை அமைத்து உண்மை நிலையை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் மிகவும் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அறக்கட்டளை தலைவர் ஹேமந்த் திவேதி தெரிவித்துள்ளார். ஊழியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் யார் மீதும் குற்றச்சாட்டு உறுதியாக நிரூபிக்கப்பட்டால் விதிப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மலைப்பகுதியில் அமைந்துள்ள பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் கோவில்கள் குளிர்காலத்தில் மூடப்பட்டு, கோடைக்காலத்தில் பக்தர்களுக்காக திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நன்கொடை முறைகேடு விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Crores rupees looted from devotees money After Ayodhya mega controversy rocks Badrinath Temple Trust