செல்பி எடுத்த சில நிமிடங்களில்… துயரத்தில் முடிந்த தாய்–மகன் பயணம்! நடந்தது என்ன...?
Just minutes after taking selfie mother son trip ended tragedy What happened
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகிலுள்ள புங்கங்குழி–ஆதனூர் பகுதியைச் சேர்ந்த ரகுபதி (35) தொழிலாளி. திருப்பூரில் வேலை பார்த்த காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டி லெட்சுமி (33) என்பவரை காதலித்து, 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தம்பதியருக்கு லோகேஷ் (7), கவிலேஷ் (3) என இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் அடிக்கடி திருப்பூரில் கட்டிடத் தளங்களில் கூலி வேலை செய்து வந்தனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக ரகுபதி திருப்பூருக்கு செல்வதை நிறுத்தினார். இதே நேரத்தில், தீபாவளி திருநாள் முடிந்த உடனேயே பாண்டி லெட்சுமி தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மீண்டும் திருப்பூரில் வேலை தொடர சென்றார்.இந்நிலையில், நேற்று மாலை அவர் தனது இரு மகன்களோடு பஸ்சில் அரியலூரை நோக்கி புறப்பட்டு, விக்கிரமங்கலம் அருகிலுள்ள அம்பலவர் கட்டளைப் பகுதிக்கு வந்தடைந்தார்.
அங்கு பஸ்நிலையம் அருகே உள்ள கீழக்கொட்டேரி பகுதியில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக செல்பி எடுத்து கொண்டார்.அதன்பிறகு திடீரென மனஉளைச்சலுக்கு ஆளான பாண்டி லெட்சுமி, தனது புதல்வன் லோகேஷை ஏரிக்கரையில் நிற்கச் சொல்லி, இளையவன் கவிலேஷை துப்பட்டாவால் உடலோடு இறுக்கமாக கட்டிக்கொண்டு ஏரிக்குள் பாய்ந்தார்.
இதைக் கண்ட லோகேஷ் அதிர்ச்சியில் கதறி அழுதான்.சிறுவனின் அலறலைக் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள் விசாரிக்க, அவன் தாய் தம்பியுடன் நீரில் குதித்துவிட்டதாக கூறியதும், சிலர் உடனே ஏரிக்குள் இறங்கி இருவரையும் கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
உடனே பொதுமக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பாண்டி லெட்சுமி மற்றும் கவிலேஷ் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
இந்த துயரச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாண்டி லெட்சுமி இப்படியொரு அதிர்ச்சி முடிவை எடுக்க காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Just minutes after taking selfie mother son trip ended tragedy What happened