கல்வி எனும் தேருக்கு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்தான் அச்சாணி..உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
It is the primary school teachers who are the foundation for educationUdhayanidhi Stalins speech
தொடக்கக் கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான். அதற்கு காரணமும் ஆசிரியர்கள் நீங்கள் தான் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து, 6 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான "திறன்"புத்தகங்களை துணை முதலமைச்சர் வெளியிட்டார்.
அதேபோல மேலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குக் கணினிசார் அடிப்படை அறிவியலையும், செயற்கை நுண்ணறிவுத் திறன் மற்றும் அதனைப் பயன்படுத்தும் நுட்ப அறிவியலையும் கற்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள என்ற புதிய பாடத்திட்ட பாடநூல்களையும் வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:"எனக்கு எப்பவுமே ஆசிரியர்களைப் பார்த்தாலே கொஞ்சம் பதற்றம் வந்துவிடும். ஒன்றிரண்டு ஆசிரியர்களை பார்த்தாலே பதற்றம் வந்து விடும். மாணவர்களுக்கு 'அகரம்' சொல்லிக் கொடுத்து, அவர்கள் படிக்கப் போகின்ற Robotics, AI போன்ற பெரிய, பெரிய படிப்புக்கெல்லாம் அடித்தளம் இடுவது தொடக்கக் கல்வி ஆசிரியர்களாகிய நீங்கள் தான். உங்களிடமிருந்து தான் கல்வியை மட்டுமின்றி இன்றைக்கு உலகையும் மாணவச் செல்வங்கள் கற்றுக் கொள்ள இருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட ஆரம்பக் கல்வியை வழங்கும் பணியை தொடங்கவுள்ள நீங்கள் ஒவ்வொருவரும் போற்றுதலுக்கு உரியவர்கள், பாராட்டுக்கு உரியவர்கள்.தொடக்கக் கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான். அத்தகைய சிறப்புமிக்க கல்வித்துறையில் பணியேற்கக்கூடிய உங்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். ஊர்கூடி இழுக்க வேண்டிய அந்த கல்வி எனும் தேருக்கு தொடக்கக் கல்வி ஆசிரியர்களாகிய நீங்கள்தான் அச்சாணி.."இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
English Summary
It is the primary school teachers who are the foundation for educationUdhayanidhi Stalins speech