வங்கக் கடலில் உருவாகியிருந்த புயல் சின்னம்.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!
IMD Bay of Bengal strengthened deep depression
வங்கக் கடலில் உருவாகியிருந்த புயல் சின்னம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் இருந்த குறைந்த காற்றழுத்தம் கடந்த சனிக்கிழமை மேற்கு திசையில் நகர்ந்து, தற்போது வலுவான காற்றழுத்த தாழ்வாக மாறியுள்ளது.
இன்றைய (அக்டோபர் 26) நிலவரப்படி, அந்த மண்டலம் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 790 கிலோமீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 850 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள், அது தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலை நோக்கி நகர்ந்து “மோந்தா” எனப் பெயரிடப்படும் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன் பின்னர், மோந்தா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 28ஆம் தேதி ஆந்திரக் கடற்கரையை நோக்கி தீவிர புயலாக மாறும் வாய்ப்புள்ளது. அது மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே, குறிப்பாக காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், புயலின் நகர்வில் ஏற்படும் மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, வடதமிழக மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் எனவும், கடலோர மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் இருப்பது பாதுகாப்பானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
English Summary
IMD Bay of Bengal strengthened deep depression