ஈரோட்டை புரட்டி போட்ட மழை: ரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்து பயணிகள் அவதி..!
Heavy rains in Erode cause flooding at railway station causing inconvenience to passengers
ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு பகலில் வெயில் அடித்தாலும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று மாலை சுமார் 05 மணியளவில் திடீரென பலத்த மழை கொட்ட தொடங்கியது. காற்று மற்றும் இடியுடன் கூடிய இந்த மழை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் ஈரோடு நகரச் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வெள்ளநீர் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் கொல்லம்பாளையம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. அதனையடுத்து, அங்கிருந்தவர்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர், ரயில் நிலையத்துக்குள் புகுந்ததால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியதால், ரயில் நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பாதை முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் பயணிகள் கடும் சிரமத்துடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மேலும் புக்கிங் அலுவலகத்திலும் மழை நீர் புகுந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் அவதிக்குள்ளாகினர். இன்று காலை 08 மணி நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 15 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 06 செ.மீ மழை பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Heavy rains in Erode cause flooding at railway station causing inconvenience to passengers