பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டதா?விஜய் எடுத்த புதிய நிலைப்பாடு? டெல்லி சொன்ன ஷாக் தகவல்!
Has the Parandur airport project been dropped The new stance taken by vijay Shocking news from Delhi
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய பன்னாட்டு கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டம் குறித்து மத்திய அரசு மக்களவையில் அளித்த பதில் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர், 2026 மே மாதத்திற்குப் பிறகு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவது, மாற்றுவது அல்லது திரும்பப் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வக் கடிதமோ, முன்மொழிவோ கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பரந்தூர் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டத்துக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு (TIDCO) ஏற்கனவே கொள்கை ரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் சுமார் 4,970 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைய திட்டமிடப்பட்டது. ஆனால், விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்ற காரணத்தால், ஏகனாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களை பாதுகாக்கும் நோக்கில் பரந்தூர் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், மாற்று இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் தற்போதைய விளக்கத்தின்படி, திட்டத்தை மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ மாநில அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனால், பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடருமா அல்லது மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு புதிய முன்மொழிவு அனுப்பப்படுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
மேலும், மாநில அரசின் சமீபத்திய பட்ஜெட்டிலும் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அல்லது காலக்கெடு குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாத நிலையில், திட்டத்தின் எதிர்காலம் குறித்து அரசு விரைவில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள், தொழில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
English Summary
Has the Parandur airport project been dropped The new stance taken by vijay Shocking news from Delhi