பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை...! சென்னை வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி போக்சோ சட்டம் அதிரடி...!
harassment school girl Chennai youth sentenced 20 years prison POCSO Act takes action
சென்னையில் 17 வயது பள்ளி மாணவிக்கு சமூக வலைதளம் மூலம் பழகி பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன், இன்ஸ்டாகிராம் வழியாக அறிமுகமாகி பழகிய பாண்டியராஜன் என்ற ஜான் ஒபெத் (24), கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் விசாரணை ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், பாண்டியராஜன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளி பாண்டியராஜனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவரின் மறுவாழ்வு மற்றும் நலனை கருத்தில் கொண்டு தேவையான உதவிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
harassment school girl Chennai youth sentenced 20 years prison POCSO Act takes action