சட்டசபை கூட்டத்தை முடித்து வைத்த ஆளுநர் - இந்த ஆண்டு உரையாற்ற வாய்ப்பு உண்டா?
governor ra ravi closure tn assembly session
ஒவ்வொரு வருடமும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஆண்டின் முதல் கூட்டம் தொடங்கியது.
அப்போது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில், ஆளுநர் சிலவற்றை நீக்கியும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். இதனால், அவருக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதையறிந்த ஆளுநரும் பேரவையில் இருந்து வெளியேறினார். பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் - தமிழக அரசு இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தாண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டம் ஆளுநரால் முடித்து வைக்கப்படாத நிலையில், ஆளுநரை அழைக்காமலேயே கூட்டத் தொடரை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, சட்டப்பேரவையின் 5-வது கூட்டத் தொடரை முடித்து வைப்பதற்கு அனுமதி கோரும் கோப்பினை தமிழக சட்டப்பேரவை செயலகம் ஆளுநருக்கு அனுப்பியதைத் தொடர்ந்து, ஆளுநரும் நேற்று கூட்டத்தொடரை முடித்து வைக்க அனுமதியளித்துள்ளார்.
இதையடுத்து, ‘கடந்தாண்டு ஜன.9-ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரை, ஆளுநர் முடித்து வைத்துள்ளார்’ என சட்டப்பேரவை செயலர் கே.சீனிவாசன் அறிவித்துள்ளார். இதனால், அடுத்த மாதம் தொடங்கும் அடுத்த கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
English Summary
governor ra ravi closure tn assembly session