தஞ்சை தேர் விபத்து : வேதனையுடன் ஜி கே வாசன் இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் அருகே கோவில் தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நள்ளிரவு தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் தேரோட்டத்தின் போது 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர்  மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. மேலும் 10 பேர் படுகாயமடைந்திருப்பதும் வருத்தம் அளிக்கிறது. படுகாயமடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு உயர்தர தீவிர சிகிச்சை அளித்து, பூரண குணமடைந்து விடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அதாவது களிமேட்டில் நடைபெற்ற  94 ஆவது அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு, சப்பரம் திருவிழாவின் போது இந்த கோர விபத்து ஏற்பட்டிருக்கிறது. 
இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களும், பக்தர்களும், அப்பகுதி மக்களும் மிகுந்த துயரத்தில் இருக்கிறார்கள்.கோவில் திருவிழாவின் போது பக்தர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் சாமி தரிசனத்துக்காக, தேர் இழுப்பதற்காக கூட்டம் கூட்டமாக  வருவது வழக்கமானது. 

இந்நிலையில் கோவில் உள்ள இடங்கள், தேரோட்டம் நடைபெறும் வழிப்பகுதி உள்ளிட்ட அதன் சுற்றுப்பகுதிகளில் மின் இணைப்பு, மின் கம்பம், மின் கம்பிகள் ஆகியவற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டியது அவசியம். மின் கம்பியில் தேர் உரசுவது, மின்சாரம் தாக்குவது ஆகியவை நடைபெறாமல் இருக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

எனவே தமிழக அரசு, நேற்று நடைபெற்ற தேர்த் திருவிழாவிற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா, பக்தர்களையும், பொது மக்களையும் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட பணி என்ன என்பதற்கு உரிய விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற ஒரு விபத்து இனிமேல் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு மாநிலம் முழுவதும் மின்சாரம் செல்லும் பாதைகள், மின்வழித்தடங்கள் உள்ளிட்ட பலவற்றை முறையாக பார்வையிட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேரின் இழப்பு அவர்களின் குடும்பங்களுக்கு பேரிழப்பாகும்.தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையும், படுகாயமடைந்தவர்களுக்கு உதவித்தொகையும்  வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan statement for thanjavur chariot accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->