பகீர் கொலை! நண்பனைத் தீர்த்துக்கட்டி கிணற்றில் வீசிய கும்பல்...! - காவலர்கள் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
Gang that killed friend and threw him into well Shocking information revealed in police investigation
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள மேலூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுபாஷ் (22), பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தவர். விடுமுறைக்காக கடந்த 15-ம் தேதி சொந்த ஊருக்கு திரும்பிய அவர், அதே நாளின் மாலை மர்மமான சூழ்நிலையில் காணாமல் போனது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது, கதிரவன் காலனி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் சுபாஷ் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததும் சம்பவத்தின் கொடூரத்தைக் காட்டுவதாக இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், சுபாஷை அவரது நெருங்கிய நண்பர்களே திட்டமிட்டு கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. முன்பே ஏற்பட்ட விரோதம் காரணமாக, இரட்டைகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (27), மேலூரைச் சேர்ந்த தனசங்கர் (26) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இந்த சதியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சுபாஷ் விடுமுறையில் ஊருக்கு வந்ததை அறிந்த அவர்கள், கதிரவன் காலனி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நிலையில், சுபாஷையும் அதில் ஈடுபட வற்புறுத்தியதாகவும், அவர் மறுத்ததால் வாக்குவாதம் தீவிரமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஆவேசமடைந்த மூவரும், அரிவாளால் சரமாரியாக தாக்கி சுபாஷை கொடூரமாகக் கொலை செய்ததுடன், பின்னர் அவரது உடலை கட்டிப்போட்டு பாழடைந்த கிணற்றில் வீசி தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Gang that killed friend and threw him into well Shocking information revealed in police investigation