“சினிமாத்துறைக்கு விஜய்யே அமைச்சராக இருக்க வேண்டும்” ராஜ்மோகன் தயவு செய்து வேண்டாமே.. CM விஜய்க்கு விஷால் கோரிக்கை!
Vijay should be the minister for the cinema industry Rajmohan please donot do it Vishal requests CM Vijay
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த மே 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் அமைச்சர் ராஜ் மோகனுக்கு பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, தகவல் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சினிமாத்துறைக்கு தனிப்பட்ட அனுபவம் கொண்டவர் அமைச்சராக இருக்க வேண்டும் என்றும், அந்த பொறுப்பை முதலமைச்சர் விஜய்யே ஏற்க வேண்டும் என்றும் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள விஷால், “முதல்வர் விஜய் அமைச்சரவையை அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் சினிமா தொழில்நுட்பம் மற்றும் சினிமாடோகிராப் சட்டத்துறைக்கு மாண்புமிகு ராஜ் மோகன் நியமிக்கப்பட்டது கொஞ்சம் வருத்தமளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
“இப்போது சினிமா துறை மிகக் கடினமான சூழலில் உள்ளது. தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் சிரமத்தில் இயங்கி வருகின்றன. இத்தகைய சூழலில், சினிமா துறையின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை சினிமா அனுபவம் இல்லாத ஒருவரிடம் எப்படிக் கொண்டு செல்ல முடியும்?
முதல்வர் விஜய் கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையின் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். அடிமட்டத்தில் இருந்து இந்த துறையின் சிக்கல்களையும், தேவைகளையும் நன்கு அறிந்தவர். எனவே சினிமாத்துறைக்கு அவரே அமைச்சராக இருந்தால், துறைக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும்” என்று விஷால் தெரிவித்தார்.
அதேபோல் சினிமாத்துறைக்கான சில முக்கிய கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
விஷால் முன்வைத்த கோரிக்கைகள்:
-
அரசு டிக்கெட் விண்டோ முறை:
திரைப்பட டிக்கெட் விற்பனையை அரசு மூலமாக நடத்த வேண்டும். இதனால் அரசுக்கும் வருமானம் கிடைக்கும், ரசிகர்களும் கூடுதல் சர்வீஸ் சார்ஜ் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
-
உள்ளாட்சி வரி ரத்து:
GST நடைமுறையில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் இரட்டை வரி விதிப்பு நடைபெறுவதாக கூறிய விஷால், உள்ளாட்சி வரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
-
சிறு பட்ஜெட் படங்களுக்கு அதிக மானியம்:
குறும்பட்ஜெட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
“இந்த கோரிக்கைகளை கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அமைச்சர் ராஜ் மோகனை குறைத்து மதிப்பிடுவது என் நோக்கம் அல்ல. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. முதல்வர் விஜய் நினைத்தால் மட்டுமே சினிமா துறைக்கு நல்ல விடிவுகாலம் பிறக்கும்” என்றும் விஷால் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விஷாலின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, திரையுலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Vijay should be the minister for the cinema industry Rajmohan please donot do it Vishal requests CM Vijay