இதெல்லாம் வேலைக்குத் தேர்வாகாதவர் சுமத்தும் வீண் பழி - பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம்..!
Foxcon Explained About Job Refused For Married Women
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், ஐ போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியை செய்து வருகிறது. உலகின் முன்னணி நிறுவனமான பாக்ஸ்கான் சமீபத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
அதைப் பார்த்த இரண்டு பெண்கள் அங்கு வேலை கேட்டுச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வாசல் கேட் அருகே நின்று கொண்டிருந்த இரு அதிகாரிகள் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று கேட்டுள்ளனர். இதற்கு அந்த பெண்கள் ஆம் என்று கூறியதையடுத்து, திருமணம் ஆகி இருந்தால் இங்கு வேலை இல்லை என்று கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்கள் தெரிந்த சிலரிடம் இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதையடுத்து இந்த விஷயம் வெளிநாட்டு ஊடகங்கள் வரை பரவி மிகப் பெரிய அளவில் கட்டுரையாக எழுதி விமர்சித்திருந்தனர். இதையடுத்து மிகப்பெரும் சர்ச்சையாக உருவெடுத்த இந்த சம்பவத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பாக்ஸ்கான் நிறுவனம், "வேலைக்கு தேர்வு ஆகாதவர்கள் எங்கள் நிறுவனம் மீது சுமத்தும் வீண் பழி தான் இது. எங்கள் நிறுவனத்தில் அப்படி எந்த கொள்கையும் இல்லை. சாதி, மதம், பாலினம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் தகுதியுள்ள அனைவரையும் எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு எடுத்துக் கொள்கிறோம்.
பாதுகாப்பு கருதி தங்கம் உள்ளிட்ட உலோகங்களை அணிவதற்கு மட்டுமே எங்கள் நிறுவனத்தில் தடை விதிக்கப் பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
English Summary
Foxcon Explained About Job Refused For Married Women