'பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்'; 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 08-ஆம் தேதி மதுரை தொடர் ஆர்ப்பாட்டம்; விவசாய சங்கங்கள் அறிவிப்பு..!
Farmers unions announce a continuous protest in Madurai on October 8th pressing for a 10 point list of demands
தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று விருதுநகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராம்பாண்டியன் தலைமை வகித்தார். தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் சீனிவாசகன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் அர்ச்சுணன், தமிழ் விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் நாராயணசாமி, தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அய்யனார், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மலைச்சாமி, விருதுநகர் மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிவகங்கை மாவட்டத் தலைவர் சோனையன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த இக்கூட்டத்தில், தென் மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் அர்ச்சுணன், தமிழ் விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் நாராயணசாமி ஆகியோர் இணைந்து பேட்டி அளித்தனர். அதில் அவர்கள் கூறியதாவது;

தமிழக முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட விவசாயிகளிடம் பிரிமியம் தொகை வசூல் செய்வதால் தனிப்பட்ட விவசாயி சர்வே எண்ணில் ஏற்படும் மகசூல் பாதிப்புக்கு காப்பீடு வழங்க வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள காப்பீடு தொகை அனைத்தையும் உடனே வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், வறட்சி பாதிப்பு என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் உடனே வழங்க வேண்டும் என்றும், வைகை அணை, மேட்டூர் அணை, பிளவக்கல் அணை, பேச்சிப்பாறை அணை உள்ளிட்ட அனைத்து அணைகளும் தூர் வாரப்பட வேண்டும் எனவும் ஏரிகள் குளங்கள் நீர் நிலைகள் அனைத்தையும் தூர் வாரி பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், நெல் கொள்முதல் மையங்களில் நடக்கும் முறைகேடுகளைக் களைய வேண்டும் எனவும், மக்காச் சோளம், பருத்தி, மிளகாய் ஆகிய விளைபொருட்களையும் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், போதுமான அளவு சேமிப்புக் கிடங்குகளை போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 08-ஆம் தேதி மதுரையில் 05 ஆயிரம் விவசாயிகளைத் திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
English Summary
Farmers unions announce a continuous protest in Madurai on October 8th pressing for a 10 point list of demands