மதத்தை மீறிய நம்பிக்கை...! மகன் குணமடைந்த நன்றி! - அம்மன் கோவிலில் கிடா வெட்டி 200 பேருக்கு விருந்து
faith that transcends religion gratitude her son recovery goat sacrificed Amman temple and feast served 200 people
தஞ்சாவூர் விளார் சாலை நாவலர் நகரில் மளிகைக் கடை நடத்தி வரும் ஜாகிர் உசேன் (52) – தன்சிலா (48) தம்பதியின் ஒரே மகன் பாரீஸ்கான் (27), பொறியியல் பட்டதாரி. சில மாதங்களாக கடுமையான உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மகனின் நிலை குடும்பத்தினரை மனம் உடையச் செய்தது.இதை அறிந்த நாவலர் நகர் பகுதியினர், ஜாகிர் உசேனுக்கு ஆறுதல் கூறி, அந்த பகுதியில் பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோவிலில் வேண்டிக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினர்.
அதன்படி மனம் உருகி குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று மகன் குணமடைய பிரார்த்தனை செய்தனர்.நாளடைவில் பாரீஸ்கான் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.
இதனால் மகிழ்ச்சியில் மூழ்கிய ஜாகிர் உசேன் குடும்பம், தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்தது.
அதன்படி நேற்று வீரமாகாளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து, படையலிட்டு, பின்னர் கிடா வெட்டி, அந்த பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்து பரிமாறி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
ஒரு தந்தையின் நன்றி உணர்வும், பக்தியும் கலந்து நடந்த இந்த நிகழ்வு, நாவலர் நகர் பகுதியில் அனைவரையும் நெகிழ வைத்தது.
English Summary
faith that transcends religion gratitude her son recovery goat sacrificed Amman temple and feast served 200 people