தமிழக அரசின் அலட்சியத்தால் 831 பேரின் எதிர்காலம் கேள்விக்குறி - டாக்டர் இராமதாஸ் கவலை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 17 மாதங்களுக்கு முன் நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, நேர்காணல் நடத்தப்  பட்டு பல மாதங்களாகியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நியமன ஆணைகள் வழங்கப்பட வில்லை. தேர்வில் வெற்றி பெற்ற 831 பொறியியல் பட்டதாரிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இச்சிக்கலில் தமிழக அரசின் சார்பில் காட்டப்படும் அலட்சியமும், தாமதமும் மிகுந்த கவலை அளிப்பதாக.பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 12 வகையான பொறியியல் பணிகளுக்கு 831 பேரை  தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் கடந்த ஆண்டு ஏப்ரல் 4&ஆம் நாள் அறிவிக்கப்பட்டன. அப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 02.07.2022 ஆம் நாள் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, அடுத்த சில வாரங்களில் நேர்காணலும் நடைபெற்றது.

அவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 831 பொறியாளர்களுக்கு அவர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணைகள் கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப் பட்டன. ஆனால், பணி ஒதுக்கீட்டு ஆணைகளின் அடிப்படையில் தமிழக அரசால் வழங்கப்பட வேண்டிய பணி நியமன ஆணைகள் இன்னும் வழங்கப்படவில்லை. அதனால், கைக்கெட்டிய வேலை, வாய்க்கு எட்டாமல் 831 பொறியாளர்களும் தவித்துக் கொண்டுள்ளனர். அவர்களின் தவிப்பு தீர்க்கப்பட வேண்டும்.

 பொறியியல் பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் தங்களின் சான்றிதழ் ஏற்கப்படாததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலர் தொடர்ந்த வழக்கு தான் தாமதத்திற்கு காரணம் என்று தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், அந்த வழக்கில் ஒரு மாதத்திற்கு முன்பே நவம்பர் 20ஆம் நாள் தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது. அதனடிப்படையில் புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, பணி நியமன ஆணை வழங்குவதாக இருந்தாலும் கூட, இந்நேரம் செய்து முடித்திருக்க முடியும். ஆனால், உயர்நீதிமன்றம் வழங்கிய 6 வார கெடு விரைவில் முடியவுள்ள நிலையில், அரசுத் தரப்பில் எதுவும் செய்யப்படவில்லை.

பணி நியமன ஆணைகள் வழங்கப்படாததால் பொறியியல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 831 பேரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 190 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பின்னர் நடத்தப்பட்ட நில அளவையர் & வரைவாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். பொறியியல் பணி எப்படியும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அப்பணியில் சேரவில்லை.

அதுமட்டுமின்றி, அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சார்பு பொறியியல் பணிக்கான போட்டித் தேர்வுகள், பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் சாலை ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் ஆகியவற்றை இவர்கள் மிகவும் எளிதாக எழுதி தேர்ச்சி பெற முடியும் என்றாலும், தாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றத் தேர்வில் வேலை கிடைக்கும் என்று நம்பிக் கொண்டு  இருக்கின்றனர். ஆனால், அவர்களின் தவிப்பும், துடிப்பும் தமிழ்நாடு அரசுக்கு இன்னும் புரியவில்லை.

பொறியியல் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 20 மாதங்களுக்கு மேலாகி விட்டன. தேர்வு நடைபெற்று 17 மாதங்களாகி விட்டன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்து விட்டதால், வெற்றி பெற்ற பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும், ஆணை வழங்க அரசு தாமதிப்பது ஏன்? எனத்  தெரியவில்லை.

பொறியியல் பணிக்கான ஆள்தேர்வு கடைசியாக 2019&ஆம் ஆண்டில் தான் நடைபெற்றது. அதன்பின்  கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆள்தேர்வு நடத்தப்படவில்லை. அதன்பின் 2022ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பொறியியல் பணிகள் இப்போது தான் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன. இடைப்பட்ட காலத்தில் ஆள்தேர்வு நடைபெறவில்லை என்பதால் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தகைய தருணத்தில் பொறியியல் பணிக்கான ஆணை வழங்குவதை தாமதிப்பது நியாயமல்ல.

எனவே, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் இடம்பெற்றுள்ள 12 வகையான பணிகளுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று  வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Condemn to TNGovt For Engineering jobs issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->