வரதட்சணை கொடுமை – மனைவியை மாடியில் இருந்து தள்ளிய கணவர் கைது!
Dowry cruelty Husband arrested for pushing wife off the terrace
வேலூரில், வரதட்சணை தொடர்பான கொடுமை காரணமாக கணவன் மனைவியை மாடியில் இருந்து தள்ளியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கணவன் காஜாரபீக் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்நெல்லி கிராமத்தை சேர்ந்த நர்கீஸ் (21) என்ற இளம்பெண், ஆம்புலன்சில் படுத்த நிலையில் வந்து புகார் அளித்தார்.
அப்போது அவரது மனுவில் கூறியிருப்பதாவது,2023ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் காஜாரபீக் உடன் திருமணம் நடந்ததாகவும்,
திருமணத்தில் 30 பவுன் நகை, ரூ.1.5 லட்சம், 500 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.3 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பின்னர், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், “நகை குறைவாக உள்ளது” என்ற காரணத்தைக் கூறி அவளை துன்புறுத்தியதாகவும், கூடுதல் வரதட்சணை கேட்டு வற்புறுத்தியதாகவும் நர்கீஸ் அந்த மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் நர்கீஸ் தனது மனுவில் கூறியிருப்பதாவது ,“எனது தந்தையிடம் புகார் செய்ததை காரணமாக்கி, பிப்ரவரி மாதம் கணவர் காஜாரபீக், மொட்டை மாடியில் இருந்து என்னை திடீரென தள்ளிவிட்டார். இதில் எனது கால்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. தற்போது சிகிச்சையில் இருக்கிறேன். எனக்கு சிகிச்சைக்காக ரூ.6 லட்சத்திற்கும் மேல் செலவாகி விட்டது.”என்று குறிப்பிட்டுள்ளார்.முதலில் அரியூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நர்கீஸ் கூறினார்.
இந்த விவகாரத்தைப் பற்றி வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.அதன் பேரில், அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, காஜாரபீக் (Marine Engineering பட்டதாரி மற்றும் AC மெக்கானிக்) கைது செய்யப்பட்டார்.
English Summary
Dowry cruelty Husband arrested for pushing wife off the terrace