18 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சாலைகளில் டபுள் டக்கர்… மீண்டும் ஓடும் நினைவுகள்!
Double decker buses Chennai roads after 18 years memories come rushing back
1970-களில் தொடங்கி நகரின் அடையாளமாக விளங்கிய இரண்டு அடுக்கு பஸ் சேவை, 2007-ல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அந்த நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு டபுள் டக்கர் பஸ் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து திட்டமிடப்பட்ட இந்த முயற்சியின் முதல் கட்டமாக, அசோக் லேலண்ட் நிறுவனத்திடமிருந்து 20 டபுள் டக்கர் பஸ்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னையின் அழகையும் பாரம்பரியத்தையும் சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், சுற்றுலாத்துறை தனி திட்டத்துடன் களமிறங்கியுள்ளது. அமெரிக்க வாழ் தமிழர்களின் நிதி பங்களிப்புடன், குளிர்சாதன வசதி கொண்ட மின்சார டபுள் டக்கர் பஸ் ஒன்று சுற்றுலாத்துறை மூலம் வாங்கப்பட்டுள்ளது.
சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் இந்த பஸ்ஸின் இருபுறங்களிலும் தஞ்சை பெரிய கோவில், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டிடம், ஜல்லிக்கட்டு வீரன் போன்ற தமிழின் அடையாளச் சின்னங்கள் இடம் பெற்றுள்ளன.
அதேசமயம், “தமிழ் வாழ்க” என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் அலங்கரிக்கிறது.இந்த பஸ் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், புதிய சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் 12-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை இந்த சுற்றுலா டபுள் டக்கர் பஸ் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை சாலைகளில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் பாயவிருப்பது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
English Summary
Double decker buses Chennai roads after 18 years memories come rushing back