சித்திரை பிறக்கட்டும்..சமூகநீதிக்கு எதிரான எதிரிகளை சுட்டெரிக்கட்டும் - மருத்துவர் ராமதாஸ் - Seithipunal
Seithipunal


ஏப்ரல் 14ம் தேதி சித்திரை திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல அரசியல் கட்சி தலைவர்களும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . மக்களவை தேர்தலுக்கு இடையே இப்புத்தாண்டு வர இருப்பதால் தனி சிறப்புமிக்க புத்தாண்டாக இப்புத்தாண்டு விளங்குகிறது.

சித்திரை திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார் . அவர் வாழ்த்து செய்தியில் ,

சித்திரை பிறக்கட்டும்..சமூகநீதிக்கு எதிரான சக்திகளை சுட்டெரிக்கட்டும்!

வசந்த விழாவையும், இந்திர விழாவையும் வழங்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும்  என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும்.

சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான். அதிலும் குறிப்பாக சித்திரை முழுநிலவு நாம் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே வழங்கும்; நமது வெற்றியை மட்டுமே பறைசாற்றும். ஆனால், சமூகநீதிக்கு எதிரான சக்திகளாலும், சதிகளாலும் நமக்கான சமூகநீதி மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது. 2022 சித்திரை நாளுக்கு முன்பாகத்தான் நமக்கு சமூகநீதி கிடைப்பதற்கு தடையாக இருந்த அனைத்தும் நீதித்துறையின் சுத்தியலால் தகர்த்து எறியப்பட்டன. உச்சநீதிமன்றமே பச்சைக்கொடி காட்டியும் உழைக்கும் மக்களுக்கான சமூகநீதி இன்னும் மலரவில்லை. நமக்கான சமூகநீதியை தாமதப்படுத்தலாமே தவிர தடுக்க முடியாது. சமுகநீதிக்கான சக்திகளை சித்திரை சுட்டெரிக்கும்; நமக்கான சமூகநீதி மிக விரைவில் மலர்ந்தே தீரும். அதற்கான உத்தரவாதத்தை நான் வழங்குகிறேன்.

அதையும் கடந்து தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்; அனைத்து மக்களின் வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க இச்சித்திரைத் திருநாளில் தமிழர்களாகிய நாம் உறுதியேற்றுக் கொள்வோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

doctor ramadoss tamil new year wishes


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->