மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்: ஜாய் கிரிசில்டாவிடம் துணை ஆணையர் விசாரணை..!
Deputy Commissioner questions Joy Crisilda regarding the Madhampatti Rangaraj affair
நடிகர் மற்றும் சமையற்கலை கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் மீது இன்று பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் துணை ஆணையர் வனிதா விசாரணை நடத்தியுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில், அண்மையில், ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜூடன் திருமண புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, தனிப்பட்ட வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அத்துடன், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு தான் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னை, ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசில்டா, சென்னை காவல் ஆணையரகத்திலும் புகார் அளித்தார். அத்துடன், பல்வேறு யூடியூப் தளங்களில் விடாது பேட்டி அளித்து வருகிறார்.

இவரின் புகாரின் படி விசாரணை நடத்த போலீஸ் ஆணையர் அருண் சென்னை பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் வனிதா விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். குறித்த உத்தரவின் படி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
அதனை தொடர்ந்து ஜாய் கிரிசில்டா இன்று காலை 11 மணிக்கு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
இதன்போது துணை ஆணையர் வனிதா, ஜாய் கிரிசில்டாவிடம், மாதம்பட்டி ரங்கராஜ் உடனான தொடர்புகள்..? திருமணம் செய்ததற்கான ஆவணங்கள், கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்கள் குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்வி பட்டியலை வைத்து வனிதா விசாரணை நடத்தியுளளார். தற்போது ஏஐ தொழில் நுட்பம் இருப்பதால் திருமணம் செய்த புகைப்படங்கள், அதற்கான தரவுகள் குறித்தும் துணை ஆணையர் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Deputy Commissioner questions Joy Crisilda regarding the Madhampatti Rangaraj affair