தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள்: பொது சுகாதாரத்துறை தீவிர எச்சரிக்கை!
Dengue and Swine Flu Cases Surge in Tamil Nadu Ahead of Monsoon Public Health Department Urges Caution
இந்திய அளவில் பொதுமக்களுக்குப் பெரும் சவாலாக விளங்கி வரும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் (Swine Flu) பாதிப்புகள், நடப்பாண்டில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விடக் கணிசமாக அதிகரித்துள்ளதாகப் பொது சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 30 வரையிலான காலத்தில் மாநிலத்தில் 13,573 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்த போதிலும், உயிரிழப்பு விகிதம் 0.06 சதவீதமாகக் கட்டுக்குள் இருப்பது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
மாதவாரியான கணக்கெடுப்பில், பிப்ரவரி முதல் மே மாதம் வரை கட்டுக்குள் இருந்த டெங்கு பாதிப்பு, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,832 ஆக இருந்த பாதிப்பு, இந்த ஆண்டு ஆகஸ்டில் 3,315 ஆகப் பாய்ந்துள்ளது. மாவட்ட வாரியாகப் பார்க்கையில், சென்னை 2,584 பாதிப்புகளுடன் முதலிடத்திலும், கோவை 1,999 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. வரவிருக்கும் மழைக்காலத்தில் நோய் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் சுகாதாரத்துறை தீவிரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதேவேளையில், பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் தேசிய அளவில் தமிழ்நாடு 1,558 நோயாளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்டில் 46 ஆக இருந்த பன்றிக் காய்ச்சல் பாதிப்பு, நடப்பாண்டு ஆகஸ்டில் 645 ஆகப் பல மடங்கு உயர்ந்துள்ளது. அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட சென்னை போன்ற பெருநகரங்களில் தனிமனித இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளைக் முறையாகப் பின்பற்றாததே இந்நோய் வேகமாகக் பரவுவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், பாதிக்கப்பட்ட நபர்கள் குறைந்தது 5 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், முகக்கவசம் அணிவது, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்பவை மற்றும் கொசு உற்பத்தியைத் தடுப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
English Summary
Dengue and Swine Flu Cases Surge in Tamil Nadu Ahead of Monsoon Public Health Department Urges Caution