எங்கிருந்து வந்தது கொரோனா?! பின்னணி என்ன?! ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்!
corona
கொரோனா தொற்றுக்கு சுற்றுச்சூழல் பேரழிவுதான் காரணம் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. புவிவெப்பமடைதல், உயிர்ச்சூழல்பன்மய (Biodiversity) அழிவு, வனவிலங்கு வேட்டை இவற்றின் காரணமாகவே விலங்குகளிடம் இருந்த கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று முடிவு அல்ல. இதுபோன்ற இன்னும் பல தாகுதல்கள் மனிதர்களை நோக்கி வரும். இதற்கெல்லாம் மனித தவறுகள் தான் காரணம் என அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
"இயற்கை காடுகள் அழிவே நோய்கள் அதிகரிக்க காரணம்"
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசையால் காடுகள் அழிக்கப்படுகின்றன. சாலை அமைத்தல், கனிமங்களை வெட்டி எடுத்தல், மரங்களை வெட்டுதல், கார்ப்பரேட் விவசாயம் என பல காரணங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அழியும் போது வனவிலங்குகளின் வாழ்விடங்களும் அழிகின்றன. இந்த சூழலில் காடுகளின் வனவிலங்குகள் மனிதர்களுடன் தொடர்பை பெறுகின்றன. கூடவே, வனவிலங்குகளை மனிதர்கள் வேட்டையாடுகின்றனர்.
இவ்வாறாக, இயற்கை உயிர்ச்சூழல் பகுதிகளை அழிப்பதுதான் கொரோனா வைரஸ் போன்ற பல நோய்கள் - விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றுவதற்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"எறும்புத்திண்ணிகளிடம் பெற்ற நோய்!"
வனவிலங்குகளை வேட்டையாடி, அதனை கள்ளச்சந்தையில் விற்பதன் மூலம் தான் புதிய கொரோனா தொற்று தொற்றியிருக்கிறது என்கிற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர். கொரோனா வைரஸ் வவ்வால்களிடம் இருந்தாலும், அவற்றின் மூலமாக இந்த நோய் மனிதர்களுக்கு வரவில்லை என விஞ்ஞானிகள் கருதினர்.
இந்நிலையில், மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட எறும்புத்திண்ணிகளை தெற்கு சீனாவில் கைப்பற்றினர். இவற்றில் நடத்தப்பட்ட சோதனையில், புதிய கொரோனா வைரசும், மலேசிய எறும்புத் திண்ணிகளிடம் இருந்த கொரோனா வைரசும் ஒன்றுதான் என கண்டறிந்துள்ளனர்.
சீனாவில் உணவாகவும் மருந்தாகவும் எறும்புத் திண்ணிகளை பயன்படுத்துவன் மூலமே மனிதர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
"வனவிலங்கு விற்பனைக்கு தடை"
இதனிடையே வனவிலங்குகள் விற்பனையையும் கடத்தலையும் முழுமையாக தடுக்கப்போவதாக சீன அதிபர் தற்போது அறிவித்துள்ளார். அதாவது தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்துள்ளார்.
"சுற்றுச்சூழல் பாதுகாப்பே உயிர்வாழ்வின் ஆதாரம்"
புவிவெப்பமடைதலை தடுப்பதும், உயிரிப்பன்மயத்தை (Biodiversity) காப்பாற்றுவதும், வனவிலங்கு அழிவை தடுப்பதும் யாருக்கோ நடக்கும் நிகழ்வல்ல. நாம் ஒரு வலைப்பின்னல் உலகில் வாழ்கிறோம். புவிவெப்பமடைதல், உயிரிப்பன்மய அழிவு, வனவிலங்கு அழிவு - இவை எல்லாம் ஒவ்வொரு மனிதனையும் பாதிக்கும் பேராபத்து என்பதை கொரோனா வைரஸ் மெய்ப்பித்துள்ளது.
கட்டுரையாளர் : இர. அருள். பசுமை தாயகம் மாநில பொதுச்செயலாளர்.