சாம்சங் ஊழியர்கள் சஸ்பெண்ட் விவகாரம்: ஆட்சியர் தலையிட வேண்டும் என மறியல் போராட்டம்; சிஐடியு தொழிலாளர்கள் அதிரடி கைது..!
CITU workers protest demanding the Collectors intervention in the Samsung employee suspension issue
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்தாண்டு தொழிற்சாலையில் வேலை செய்த தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், போனஸ் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இதனால் சாம்சங் நிர்வாகம் தொழிலாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கையை கையில் எடுத்தோடு, தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய சிஐடியு தொழிலாளர்கள் மீது ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், பணியின்போது அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக 27 தொழிலாளர்களை சஸ்பெண்ட் செய்தது.

இவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி சக தொழிலாளர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தினர். கடந்த 07 மாதங்களை கடந்தும் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வில்லை. இந்த சம்பவம் தொடர்பில், தமிழக தொழிலாளர் நலத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிஐடியு குற்றம் சாட்டியது.
இந்நிலையில் இன்று இந்த விவகாரத்தில் காஞ்சிபுரம் ஆட்சியர் தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தி சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார் தலைமையில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சுங்குவார்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பேரணி புறப்பட்டனர்.

ஏற்கனவே, இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் அனுமதி யின்றி பேரணி புறப்பட்ட தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தொழிலாளர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். அப்போது, தொழிலாளர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் 02 பேருந்துகளில் ஏற்றி அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
CITU workers protest demanding the Collectors intervention in the Samsung employee suspension issue