ஆன்லைன் மூலமாக விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் திட்டம்: விண்ணபித்த அன்றே பெற்றுக்கொள்ளலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு..
Chief Minister MK Stalin launches a scheme to provide crop loans to farmers on the same day they apply online
இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சேலம், தருமபுரி மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதில் முக்கிய நிகழ்வாக தமிழகத்திலேயே முதன் முறையாக இ-கிஷான் கிரெடிட் கார்டு மூலமாக விவசாய கடன் வழங்க கூடிய திட்டத்தை தருமபுரி அடுத்துள்ள அதியமான் கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தொடங்கி வைத்துள்ளார்.
அதாவது, விவசாயிகள் வங்கி கடனை, ஆன்லைன் மூலமாக விண்ணபித்த அன்றே வழங்க கூடிய திட்டமாக இது அமைந்துள்ளது. முதல் முயற்சியாக தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டமானது படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் இருக்க கூடிய 136 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் 21 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுவரை விவசாயிகள் பயிர்கடன் பெறுவதற்கு ஆவணங்களுடன் கூட்டுறவு வங்கிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது, ஆவணத்தை பரிசீலித்து கடன் வழங்க சுமார் 7 நாட்கள் வரை ஆகும். இந்த கால தாமதத்தை தவிர்க்க முன்னோடி திட்டமாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் மூலம் இ-சேவை மையங்கள், அல்லது வீட்டில் இருந்தபடியே விவசாயிகள் நேரடியாக விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கும் போது அதே தினத்தில் அதிகாரிகள் உடனடியாக ஆவணங்களை பரிசீலித்து உடனடியாக பயிர்கடன் வழங்கப்படவுள்ளது.
இதன்படி, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பயிர்கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chief Minister MK Stalin launches a scheme to provide crop loans to farmers on the same day they apply online