சென்னை அரசு பள்ளி வேதியியல் ஆய்வக தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்!
Chennau Govt School Student Acid Attack
சென்னை சேத்துப்பட்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் ஒருவருக்கு ஏற்பட்ட ஆசிட் விபத்து, பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எஸ்.நகரைச் சேர்ந்த பாலாஜியின் மகன், அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 25ம் தேதி, பள்ளி வேதியியல் ஆய்வகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஆசிரியர்களும் ஊழியர்களும் ஈடுபட்டிருந்தனர். அதில் மாணவனையும் சேர்த்துள்ளனர்.
அப்போது, ஆய்வகத்தில் இருந்த ரசாயன பாட்டில்கள் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கழிவறையில் வைக்கப்பட்டன. அந்த மூட்டையை வெளியே கொண்டுபோக்குமாறு ஆசிரியர்கள் மாணவனிடம் கூறினர். மூட்டையை தூக்க முடியாது என கூறினாலும், வலுக்கட்டாயமாக தூக்கச் செய்தனர்.
மூட்டையை தோளில் தூக்கிச் சென்ற மாணவனின் மீது பாட்டில்கள் உடைந்து, ஆசிட் உடலில் பின்பகுதியில் விழுந்தது. பலத்தக் காயமடைந்த மாணவன் துடித்தபடி அழுதார். உடனே பள்ளி ஊழியர்கள் காயங்களை கழுவி, தேங்காய் எண்ணெய் தடவினர். ஆனால் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் மாணவனை வீடு அனுப்பி வைத்தனர்.
இதை அறிந்த மாணவனின் தாய் சந்தியா, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு கேட்டுள்ளார்.
இதற்கிடையே தீவிர காயமடைந்த மாணவனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Chennau Govt School Student Acid Attack