பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே இப்படி செய்யலாமா...? - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது...!
Can person who supposed provide security do this Policeman arrested harassing schoolgirl
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (26), கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் இணைந்தவர். தற்போது சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றி வருகிறார்.
அண்மையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக விடுப்பு பெற்று ஊருக்கு வந்திருந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் 13 வயது பள்ளி மாணவியிடம் ஒழுங்கு மீறிய வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்த மாணவி, வீட்டிற்கு சென்று தனக்கு நேர்ந்த அனுபவங்களை பெற்றோரிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்ததுடன், உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மகளிர் காவலர்கள் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்ட ஆய்வில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக தெரியவந்ததையடுத்து, விஜயகுமார் மீது குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விஜயகுமாரை காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் உள்ள காவல்துறை பணியாளரே இத்தகைய குற்றச்சாட்டில் சிக்கி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம், தென் மாவட்டங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Can person who supposed provide security do this Policeman arrested harassing schoolgirl