4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… குற்றவாளிக்கு ‘சாகும் வரை ஆயுள்’...! - நெல்லை போக்சோ நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
brutality that happened 4 year old girl culprit gets life until death dramatic verdict by Nellai POCSO court
திருநெல்வேலி மாவட்டத்தில் மனிதநேயத்தை உலுக்கிய கொடூரச் சம்பவத்தில் குற்றவாளி கடுமையான தண்டனையை எதிர்கொண்டுள்ளார். 2023-ம் ஆண்டு, லெட்சுமணகுமார் (45) என்ற நபர், 4 வயது சிறுமியிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.அப்போது பணியாற்றிய இன்ஸ்பெக்டர் அன்னபூரணி தலைமையில் நடைபெற்ற தீவிர புலன் விசாரணையில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து சேகரிக்கப்பட்ட உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விரைவாக விசாரிக்கப்பட்டது.
இந்த விசாரணை முழுவதும் குற்றச்சாட்டுகள் உறுதியாக நிரூபிக்கப்பட்ட நிலையில், நீதிபதி சுரேஷ்குமார், 26.03.2026 அன்று தீர்ப்பளித்து, குற்றவாளிக்கு “சாகும் வரை ஆயுள் சிறை” தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு சார்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கை விரைந்து முடிக்க முக்கிய பங்காற்றிய அதிகாரிகள் ஏ.டி.எஸ்.பி. சண்முகம், டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, முன்னாள் இன்ஸ்பெக்டர் அன்னபூரணி, பெண் காவலர் யாஸ்மின், மற்றும் அரசு வழக்கறிஞர் உஷா அனைவரையும் மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமார் பாராட்டினார்.
மேலும், திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் 6 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், ஒருவருக்கு மரண தண்டனை, ஒருவருக்கு சாகும் வரை ஆயுள், ஒருவருக்கு ஆயுள் தண்டனை, மற்றொருவருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதியுடன் செயல்படும் காவல்துறை, இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தொடர்ந்து கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
brutality that happened 4 year old girl culprit gets life until death dramatic verdict by Nellai POCSO court