தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நீலகேனி தலைமையில் உயர்மட்டக் குழு!சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தேர்வு சீர்திருத்தக் குழுவில் நியமனம்!
High level committee for exam reforms headed by Nandan Nilekani IIT Madras Director Kamakoti appointed to the exam reform committee
நாடு முழுவதும் தேர்வு முறைகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், நந்தன் நீலகேனி தலைமையில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ். சோமநாத் உள்ளிட்ட ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள இந்த உயர்மட்டக் குழுவுக்கு, ஆதார் திட்டத்தின் முன்னாள் தலைவர் நந்தன் நீலகேனி தலைமை வகிக்கிறார். தேர்வு முறைகளை நவீனமயமாக்குவது, தொழில்நுட்ப அடிப்படையிலான சீர்திருத்தங்களை பரிந்துரைப்பது மற்றும் தேர்வுகளின் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவது ஆகியவை இந்தக் குழுவின் முக்கிய பொறுப்புகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ். சோமநாத், உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் தபன் தேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி, முன்னாள் பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் அனிதா கர்வால் மற்றும் நிர்வாக நிபுணர் அம்ரித் லால் மீனா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஐஐடியின் இயக்குநராக 2022 முதல் பணியாற்றி வரும் டாக்டர் வி. காமகோடி, கணினி அறிவியல் துறையில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். இந்தியாவில் உருவாக்கப்பட்ட 'சக்தி' (SHAKTI) மைக்ரோபிராசஸர் திட்டத்தை முன்னெடுத்த குழுவுக்கு தலைமை வகித்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்திலும் உறுப்பினராக பணியாற்றியுள்ள அவர், பல்வேறு தேசிய அளவிலான விருதுகளையும் பெற்றுள்ளார்.
இருப்பினும், கடந்த 2025-ஆம் ஆண்டு மாட்டுப் பொங்கல் விழா நிகழ்ச்சியில் அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது, தனது தந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபோது ஒரு சந்நியாசியின் ஆலோசனையின்படி கோமியம் அருந்தியதும் உடல்நிலை குணமானதாகவும், கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு மருத்துவர்கள் மற்றும் அறிவியல் வட்டாரங்களில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. கோமியத்தை உட்கொள்வதால் நோய்கள் குணமாகும் என்பதை உறுதிப்படுத்தும் அறிவியல் ஆதாரங்கள் தற்போது இல்லை. மேலும், கோமியத்தை மருத்துவ சிகிச்சையாக அலோபதி மருத்துவ முறை அங்கீகரிக்கவில்லை. இதனால், காமகோடியின் அந்தப் பேச்சு அப்போது பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது தேர்வு சீர்திருத்தங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் உயர்மட்டக் குழுவில் வி. காமகோடி இடம்பெற்றிருப்பது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகள், எதிர்காலத்தில் நாட்டின் தேர்வு முறைகளில் முக்கிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
High level committee for exam reforms headed by Nandan Nilekani IIT Madras Director Kamakoti appointed to the exam reform committee