"பட்ஜெட் கூட்டத்தொடரில் ஊழல் பட்டியலை தாக்கல் செய்வோம்"! பரபரப்பை கிளப்பிய நிதி அமைச்சர் மரிய வில்சன்!
We will table a list of corruption cases during the budget session Finance Minister Maria Wilson sparks a sensation
தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள முதல் நிதிநிலை அறிக்கையை முன்னிட்டு, தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஊழல் தொடர்பான தனி பட்டியல் தாக்கல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், அரசியல் கட்சிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. "அறம், பொருள், இன்பம்" என்ற மூன்று அடிப்படை கொள்கைகளை மையமாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜோசப் விஜய்யின் நேரடி வழிகாட்டுதலின் பேரில், அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாகவும், பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், புதிய நலத்திட்டங்கள் எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதுடன், முந்தைய ஆட்சிக் காலங்களில் இருந்ததாக கூறப்படும் நிர்வாகக் குறைபாடுகளை சரிசெய்யும் நடவடிக்கைகளும் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், "வரப்போகும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நீங்கள் நிச்சயமாக பார்ப்பீர்கள். தனியாக ஒரு ஆடிட்டிங் செய்துள்ளோம். அந்த ஊழல் பட்டியலை தாக்கல் செய்யப் போகிறோம். அதில் எல்லாம் தெரியும். துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. பார்ட்டி ஃபண்ட் குறித்து கேட்டு வந்தார். நாங்கள் ஊழல் பட்டியலை தாக்கல் செய்யும்போது உண்மை வெளிவரும்" என்று தெரிவித்தார்.
மேலும், 2029-ஆம் ஆண்டுக்குள் தேசிய அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும் என்றும், அப்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தக் கருத்து, தேசிய அரசியலிலும் தவெக தனது பங்களிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதற்கான சுட்டிக்காட்டாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக அரசின் முதல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுகள் மட்டுமல்லாமல், ஊழல் குறித்த ஆவணங்களும் இடம்பெறவுள்ளன என்ற நிதி அமைச்சரின் அறிவிப்பு அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
We will table a list of corruption cases during the budget session Finance Minister Maria Wilson sparks a sensation