பாஜக., என்.ஆர். காங்.,அரசை கண்டித்து போராட்டம்.. திமுக ஆதிதிராவிடர் அணி தீர்மானம்!
BJP N R Congress protests against the government DMK Adi Dravidar team resolution
பாஜக., என்.ஆர். காங்., அரசின் தலித் விரோத போக்கை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக ஆதிதிராவிடர் அணி சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி மாநில தி மு கழகத்தின் ஆதிதிராவிடர் நலக்குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று 30.06.2025 திமுக தலைமை கழகத்தில் நடைபெற்றது. நலக்குழுவின் அமைப்பாளர் திரு. செல்வநாதன் (எ) ஆறுமுகம் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூ. மூர்த்தி முன்னிலை வகித்தார். நலக்குழு தலைவர் பழனிசாமி வரவேற்றார். கழக மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திருமிகு. இரா. சிவா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். துணை அமைப்பாளர்கள் அன்பழகன், காளி, சக்திவேல், திருநாவுக்கரசு, ஆறுமுகம், தெய்வேந்திரன், சக்திவேல், அய்யனார், ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.
கூட்டத்தில் கீழ்கண்ட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1. புதுச்சேரி பாஜக., என். ஆர். காங். கூட்டணி அரசில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக பணியாற்றிவந்த சாய். சரவணக்குமார் சமீபத்தில் எவ்வித காரணமும் இன்றி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். பட்டியல் இனத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவை சேர்ந்த சாய் சரவணக்குமார் அவர்களுக்கு பாஜக மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நான்கு ஆண்டுகளில் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த பதவி பறிப்பு என்பது பாஜக அவருக்கு கொடுத்த தீண்டாமை பரிசாகும். இதற்கான எந்த காரணத்தையும் பாஜகவோ முதலமைச்சரே வெளியிடவில்லை. அவர் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணமே தவிர வேறொன்றும் இல்லை.
இதன் மூலம் தலித் அமைச்சர் திறமையற்றவர் போல் சித்தரித்து அவர் வசம் இருந்த சிறப்புக் கூறு நிதியை அபகரிக்கும் செயலை பாஜக., என். ஆர். காங் அரசு கையில் எடுத்துள்ளது. இவ் ஆண்டு 465 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்ட சிறப்புக்கூறு நிதியில் ஒரு இளைஞருக்காவது வேலை பெற திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா. தொழில் மற்றும் சிறு வணிகக் கடன் வழங்கப் பட்டுள்ளதா என்றால் இல்லை. தமிழ்நாடு திராவிட மாடல் அரசில் அம்பேதகர் தொழில் முனைவோர் திட்டம் மூலம் பல்லாயிரக்கணக்கான தலித் இளைஞர்கள் இன்று தொழில் துவங்கி உயரும் வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனால் இந்த அரசில் அதற்க்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி அரசில் துவக்கப்பட்ட தலித்துகளுக்கான இலவச கல்வித்திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் இந்த அரசு மடக்கி வைத்துள்ளது. அதேபோல் அன்று கொண்டுவரப்பட்ட ரூ.5 1/2 லட்சம் வீடுகட்டும் நிதித்திட்டம் நிதியை உயர்த்துகிறோம் என்ற பெயரில் முடக்கிவைக்கப்பட்டுள்ளது. தலித்துகளுக்கான இலவச மனைப் பட்டா திட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது. மாணவர் விடுதியெல்லாம் தங்குவதற்கு லாயக்கற்றவைகளாக தேங்கிக் கிடக்கின்றன.
தலித் மக்களுக்கு தாங்கள் தான் பாதுகாவலர்கள் என்றும், அம்பேத்கரின் வாரிசுகள் என்றும் தங்களை காட்டிக்கொண்டு மறுபுறம் அவர்களின் திட்டங்களை முடக்கும் செயலிலும், பதவி பறித்தது அவமானப் படுத்தும் செயலிலும் பாஜக ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இது ஒரு தலித் விரோத அரசு என்று நிரூபிக்கிறது. இந்த துரோகத்தை தலித் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஆகவே சாய் சரவணக்குமாரிடம் இருந்து பறிக்கப்பட்ட அமைச்சர் பதவியை மீண்டும் ஒரு தலித் சமூகத்தினரிடமே ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் மாநில அளவிலான தலித் மக்களை அணிதிரட்டி மாபெரும் போராட்டத்தை திமுகழக ஆதிதிராவிட நலக்குழு முன்னெடுக்கும் என்று இக் கூட்டம் தீர்மானிக்கிறது.இறுதியில் துணைத் தலைவர் கதிரவன் நன்றி கூறினார்.
English Summary
BJP N R Congress protests against the government DMK Adi Dravidar team resolution