சட்டசபைத் தேர்தல் எதிரொலி - இபிஎஸை சந்திக்கும் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள்..!!
bjp election officers meet eps for assembly election
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது முதலே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
அதன் படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக அதிக இடங்களை கேட்டு பெறுவதில் ஆர்வமாக உள்ளது. இதற்காக, அ.தி.மு.க.வுடன் கலந்து பேசவும், கூட்டு பிரசாரத்தை முன்னெடுக்கவும், தேர்தல் வியூகத்தை வடிவமைக்கவும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டது.

தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா எம்.பி., இணை பொறுப்பாளர் மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் முதல் முறையாக சென்னைக்கு நேற்று வருகை தந்தனர். இருவரும் தியாகராயநகரில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை மாநில நிர்வாகிகளுடன் அவர்கள் முதல்கட்ட ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில், சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவது, கூட்டு பிரசாரம் செய்வது, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை, எவை? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் இணைப்பது குறித்தும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
bjp election officers meet eps for assembly election