தூத்துக்குடி உப்புக்கு வந்த பெருஞ் சோதனை...! சந்தையைக் கைப்பற்றுகிறதா குஜராத்...? பின்னணியில் இருக்கும் பேரதிர்ச்சி காரணம் என்ன...?
big test Thoothukudi salt Is Gujarat taking over market What reason panic behind it
தூத்துக்குடி மாவட்டத்தின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் உப்புத் தொழில், தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உப்பு உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், போதிய விலை கிடைக்காதது மற்றும் குஜராத்தில் இருந்து குறைந்த விலையில் உப்பு வரத்து அதிகரித்திருப்பது உற்பத்தியாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் ஜனவரி மாதத்திலேயே உப்பு உற்பத்தி தொடங்கியது. தொடர்ந்து நிலவும் கடும் வெயில் காரணமாக உற்பத்தி வேகமடைந்துள்ள நிலையில், இதுவரை சுமார் 50 சதவீத உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால், உற்பத்தி அதிகரித்தும் விலை உயராததால் பல உற்பத்தியாளர்கள் உப்பை இருப்பு வைத்துள்ளனர்.
இதற்கிடையில், குஜராத்தில் இருந்து குறைந்த விலையில் உப்பு கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் தூத்துக்குடி உப்பு விற்பனை சந்தையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடியில் முதல் தர உப்பு ஒரு டன் ரூ.1,200 முதல் ரூ.1,400 வரையிலும், குஜராத்தில் அதே அளவு உப்பு ரூ.400 முதல் ரூ.700 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் பெரிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் குஜராத் உப்பை வாங்கத் தொடங்கியுள்ளன.கூலி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் குறைந்த விலை போட்டி காரணமாக உப்பு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இதனால் பாரம்பரியமான தூத்துக்குடி உப்புத் தொழில் நலிவடைந்து வருவதால், அரசு உரிய சலுகைகள் வழங்கி இத்தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
big test Thoothukudi salt Is Gujarat taking over market What reason panic behind it