"என் துறை விழாவில் வேறு பெயர் முதலிடத்திலா?" - கலெக்டருடன் மேடையிலேயே வாக்குவாதம் செய்த அமைச்சர் ஜெகதீஸ்வரி!
Banner Protocol Dispute Sparks Clash Between TVK Ministers in Virudhunagar
விருதுநகர் மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர்களுக்கு இடையே நீண்டநாட்களாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல் மற்றும் மறைமுக மோதல் போக்கு, இன்று அரசு விழா மேடையிலேயே அதிகாரிகள் முன்னிலையில் வெளிப்படையாக வெடித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேனர் பெயர் சர்ச்சையும் வாக்குவாதமும்
விருதுநகரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாகச் சிலம்ப விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கும் அரசு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இத்துறைக்குரிய அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் அதிகாரப்பூர்வ பேனரில், அவரது பெயர் இரண்டாவதாக அச்சிடப்பட்டிருந்தது. மாறாக, விழாவுக்கு வராத மற்றும் இத்துறைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத தவெக-வின் மற்றொரு அமைச்சரான கீர்த்தனாவின் பெயர் முதலிடத்தில் அச்சிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு கடும் கோபமடைந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, விழா மேடையிலேயே மாவட்ட ஆட்சியரிடம் (Collector) நேரடியாகச் சென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதிகாரிகளுக்குக் கடுமையான கண்டனம்
ஆட்சியரிடம் ஆவேசமாகப் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, "எனது துறைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத, நிகழ்ச்சிக்கும் வராத ஒருவரின் பெயரை பேனரில் முதலில் போட்டிருப்பது என்ன நியாயம்? நான் வேண்டுமானால் இந்த விழாவை விட்டு எழுந்து சென்றுவிடவா?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், "இதுபோன்ற புரோட்டோகால் (Protocol) தவறுகளைச் செய்யாதீர்கள் என ஏற்கனவே உங்களிடம் பலமுறை அறிவுறுத்தியிருக்கிறேன். ஆனால், அதிகாரிகள் தொடர்ந்து இதே தவறைச் செய்து வருகிறீர்கள்" எனக் கூறி, மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரையும் (PRO) நேரில் அழைத்து அனைவரின் முன்னிலையிலும் கடுமையாகக் கண்டித்தார். தவெக அமைச்சர்களின் இந்த அதிரடி மோதல் போக்கு, அரசு விழாவில் அரங்கேறியிருப்பது தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Banner Protocol Dispute Sparks Clash Between TVK Ministers in Virudhunagar