மருந்து வாங்கத் திட்டமிட்டுள்ளீர்களா...? - நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி மருந்துக்கடைகள் மூடல்...!
Are you planning buy medicine Drugstores across country close 20th
இணையவழி மருந்து விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நாடு முழுவதும் வரும் 20-ஆம் தேதி மருந்தகங்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 12.4 லட்சம் மருந்தகங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால், மருந்து விநியோக சேவையில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"ஒழுங்குமுறை கண்காணிப்பு இன்றி நடைபெற்று வரும் இணையவழி மருந்து விற்பனை, நோயாளிகளின் உயிர் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

முறையான பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு இல்லாமல் மருந்துகள் விநியோகிக்கப்படுவதால், ஒரே மருந்துச் சீட்டை பலமுறை பயன்படுத்தி மருந்துகள் பெறப்படும் அபாயகரமான நிலை அதிகரித்து வருகிறது.குறிப்பாக நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் போதை தன்மை கொண்ட மருந்துகள் எந்த கட்டுப்பாடும் இன்றி கிடைப்பதற்கு இந்த இணையவழி விற்பனை வழிவகுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலி மருந்துச் சீட்டுகள் உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவது மிகப்பெரிய அபாயமாக பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக மருந்துகளுக்கு எதிரான உடல் எதிர்ப்புத் திறன் குறையும் அபாயமும் அதிகரித்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கொரோனா காலத்தில் தற்காலிகமாக வழங்கப்பட்ட சில தளர்வுகளை பயன்படுத்தி, இணையவழி நிறுவனங்கள் மருந்து விற்பனை விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருவதாகவும் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.எனவே, மின்னணு மருந்தக செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணைகளை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இணையவழி மருந்து விற்பனையால் மருந்தக உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொழிலை நம்பி வாழும் சுமார் 5 கோடி மக்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 20-ஆம் தேதிக்குள் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வேலைநிறுத்த நாளிலும் அவசரகால மருந்துகள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Are you planning buy medicine Drugstores across country close 20th