சமூகவிரோதக் கும்பலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்..ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்!
Anti-social elements should be dealt with an iron hand United Muslim Munnetra Kazhagam urges!
மதுரையின் மத நல்லிணக்க மரபைக் காப்பாற்றப் போராடும் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் மீது வன்முறையை ஏவும் பாசிச ஆற்றல்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தலைவர் செ. ஹைதர் அலி கூறியுள்ளார்,.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த, வட மாநிலங்களில் கலவரத்தை உருவாக்கியது போல், இங்கும் கலவரத்தை நிகழ்த்துவதற்குப் பல்வேறு வகையான வழிமுறைகளை செயல்படுத்தி தோல்வியடைந்த பாஜக, கடைசியாக திருப்பரங்குன்றம் முருகனை கையில் எடுத்துள்ளது.
மதுரையை அயோத்தியாக்குவோம், திருப்பங்குன்றத்தில் பாபரி பள்ளியை இடித்தது போன்று இன்னொரு இடிப்பை நிகழ்த்துவோம் என்று, தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்து வருகின்றனர் பாசிச பாஜகவினர்.
மதுரையில் கடந்த ஜூலை மாதத்தில் ஆன்மீகத்தின் பெயரால் இந்து முன்னணியின் தலைமையில் ஒரு கலவர மாநாட்டை நடத்தி முடித்துள்ளனர். அங்கு பேசிய ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாண் உள்ளிட்ட பலரும், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் உத்தரவிற்கு எதிராக, சமூக நல்லிணக்கதிற்கு எதிராகவும், மதக் கலவரத்தைத் தூண்டும் விதமாகவும் பேசினார்.
வடமாநிலங்களில் இராமரை வைத்து கலவரம் நடத்தி ஆட்சியைப் பிடித்தது போல், தமிழகத்திலும் முருகனைப் பயன்படுத்தி கலவரத்தைத் தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறத் துடிக்கும், பாசிச பாஜக மற்றும் அதன் கிளை அமைப்புகளான இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவா இயக்கங்களின் முன்னகர்வுகளை மிகச் சரியாகக் கணித்து, சட்டப் போராட்டங்களையும், சனநாயகப் போராட்டங்களையும் அறவழியில் ஒருங்கிணைத்து, பாசிசவாதிகளுக்கு கடும் சவாலாக இருப்பது மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு என்றால் மிகையல்ல.
கடந்த 2024ஆம் ஆண்டு திசம்பர் மாதம் துவங்கி இன்று வரைக்கும் பாசிசவாதிகளின் சிம்ம சொப்பணமாக இருந்து, அவர்கள் மேல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வைத்தது முதல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாநகர் காவல்துறைக்கு சட்ட அடிப்படையில் நெருக்கடிகள் கொடுப்பதை செரிக்க இயலாத பாசிசம் இறுதியாக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடத் துணிந்துவிட்டனர்.
சனநாயக வழியில் சட்டப்படி இயங்கும் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைபபின் செயல்பாடுகளை பொறுக்க இயலாமல், முருகன் மாநாட்டில் மதக்கலவரத்தைத் துண்டும் விதமாகப் பேசியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் மீது சட்டவிரோதமாகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்புப் வழக்கைக் கைவிடக் கோரியும், மதுரை கோ புதூர் பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (10/08/2025) அன்று நடைபெற்ற சனநாயக வழியிலான கண்டன அறப்போராட்டத்தில், இந்து முன்னணியின் பயங்கரவாதிகள் வன்முறையைக் கட்டவிழ்த்து உள்ளனர்.
கொட்டும் மழையிலும் பெரும் மக்கள் திரளுடன் நடைபெற்ற சனநாயக வழியிலான அறப்போராட்டத்தில், இருசக்கர வாகனத்தின் மூலம் உள்நுழைந்த மூன்று சமூக விரோதிகள் எதிர் முழக்கம் போட்டுவிட்டு ஓடியதுடன், மேலும் கலவரத்தை உருவாக்கும் முயற்சியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கலவரக் கும்பல் ஊர்வலமாக ஆர்ப்பாட்டக் களம் நோக்கி வந்துள்ளனர். அவர்களை வெறுமனே கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துவிட்டு இரவில் விடுதலை செய்துள்ளது மதுரை மாநகரக் காவல்துறை. சனநாயகத்திற்கு சவால் விடும் வகையில்,
சனநாயகத்திற்கு சவால்விடும் இந்து முன்னணியின் கலவரக் கும்பல் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்காமல் மயிலிறகால் வருடியது போன்ற மதுரை மாநகரக் காவல்துறையின் மென்மையான நடவடிக்கை மிகவும் வருந்தத்தக்கது.
தமிழக முதல்வர் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டு, சனநாயக ஆற்றலுக்கு எதிராக செயல்படும் இதுபோன்ற சமூகவிரோதக் கும்பலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதற்கு மேலும் தமிழக அரசும், காவல் துறையும் இவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்குத் தாமதித்தால், தமிழ்நாட்டையும், வடமாநிலங்கள் போன்று மத சகிப்புத்தன்மை அற்ற மாநிலமாக பாசிசவாதிகள் மாற்றிவிடுவர் என்பதை தமிழக அரசிற்கு எச்சரிக்கை செய்கிறேன் என ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தலைவர் செ. ஹைதர் அலி கூறியுள்ளார்,
English Summary
Anti-social elements should be dealt with an iron hand United Muslim Munnetra Kazhagam urges!