ரூ.72 லட்சம் பணத்தை வாங்கியதும் வீட்டை பூட்டிவிட்டு எஸ்கேப்...! தூத்துக்குடியில் த.வெ.க. பிரமுகர் செய்த பகீர் மோசடி...! - காவலர்கள் வலைவீச்சு...!
After receiving 72 lakhs he locked house and escaped huge fraud committed by TVk Thoothukudi Police netted him
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட பரமன்குறிச்சி பிச்சுவிளை பகுதியைச் சேர்ந்த கோபி (45), தூத்துக்குடியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், ஏரல் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்குச் சொந்தமான நிலச் சொத்தை ரூ.90 லட்சத்திற்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக முதற்கட்ட தொகையாக ரூ.72 லட்சத்தை கோபி வழங்கியுள்ளார். அந்தத் தொகையை பெற்றுக்கொண்ட ராஜாவும் அவரது மனைவி பொன்தெய்வமும், மீதமுள்ள ரூ.18 லட்சத்தை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செலுத்தியவுடன் கிரையப் பதிவு செய்து தருவதாக எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், வங்கி கணக்கில் ரூ.72 லட்சம் வரவு வைக்கப்பட்ட பின்னர், சொத்தைப் பதிவு செய்து தருவதில் ராஜா தம்பதியினர் காலதாமதம் செய்ததுடன், பின்னர் கோபியுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும், தங்களது வீட்டை பூட்டிவிட்டு வேறு இடத்திற்குச் சென்ற அவர்கள், தலைமறைவாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து விளக்கம் கேட்டு கோபி தொடர்புகொண்டபோது, முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்ததுடன், மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கோபி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விரிவான புகார் மனு அளித்தார். அதன் அடிப்படையில், ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையின் போது, மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ராஜா, தமிழக வெற்றிக் கழகத்தின் நகர செயலாளராக பொறுப்பு வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
After receiving 72 lakhs he locked house and escaped huge fraud committed by TVk Thoothukudi Police netted him