வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 04 ஆண்டு சிறைதண்டனை..!
A revenue inspector who accepted a bribe of Rs 25000 for issuing a legal heir certificate has been sentenced to 4 years in prison
மூதாட்டி ஒருவரிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், வருவாய் ஆய்வாளருக்கு, நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையைச் சேர்ந்தவர் 60 வயதான கிருஷ்ணவேணி. இவர், தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டாபர் 24-இல், வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.
அப்போது அங்கு பணியில் இருந்த 43 வயதான வருவாய் ஆய்வாளர் ஹரிஹரன் என்பவர், சான்றிதழ் வழங்க லஞ்சமாக, 30,000 ரூபாய் கேட்டுள்ளார். பின்னர், லஞ்ச பணத்தை, 25 ஆயிரம் ரூபாயாக குறைத்து கேட்டுள்ளார்.
இதனையடுத்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணவேணி, இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார். பின்னர், லஞ்சப் பணத்தை பெற்ற வருவாய் ஆய்வாளர் ஹரிஹரனை, போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அதனை தொடர்ந்து, ஹரிஹரன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
குறித்த வழக்கு விசாரணை, சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ஜெகநாதன் முன் நடைபெற்ற போது போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில், ''ஹரிஹரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு ஊழியரான அவர், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, முறைகேடான வழியில் பணம் ஈட்டிய குற்றச்சாட்டில், அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
கடமையை செய்ய லஞ்சம் கோரும் குற்றச்சாட்டில், மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.'' என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
English Summary
A revenue inspector who accepted a bribe of Rs 25000 for issuing a legal heir certificate has been sentenced to 4 years in prison