கேரளாவில் கொடூர கார் விபத்து: திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் பலி – போதிய எச்சரிக்கை பலகை வைக்காததே காரணமா?
8 Killed as Car Collides with Parked Lorry in Thrissur Lack of Roadwork Signage Alleged
கேரள மாநிலம் திருச்சூர் அருகே கைப்பமங்கலத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் காரில் பயணித்த திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த 8 பேரில், திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்களின் விவரங்கள் முதற்கட்ட விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வா, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ், யுவசஞ்சித் மற்றும் மதுரையைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோர் அடங்குவர். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நிகழ்ந்த பனம்பிக்குன்னு பகுதியில் சாலைப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுவது தொடர்பான எச்சரிக்கைப் பலகைகள் முறையான இடத்தில் வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. விபத்து நடைபெற்ற இடத்திற்கு 500 மீட்டருக்கு முன்னதாகவே தடுப்புகளோ அல்லது எச்சரிக்கைப் பலகைகளோ அமைக்கப்பட்டிருந்தால் இந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விபத்தின் துல்லியமான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
8 Killed as Car Collides with Parked Lorry in Thrissur Lack of Roadwork Signage Alleged