தமிழ்நாடைச் சேர்ந்த 47 மீனவர்கள் விடுதலை.. உணவு, தண்ணீர் இன்றி தவிப்பு.. இந்திய தூதரக அதிகாரி மீது மீனவர்கள் புகார்.!!
47 fishermen released
இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்தும், இதை தடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும், ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கச்சத்தீவு, தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களை கைது செய்வதோடு, அவர்களின் மீன்பிடி வலைகள் மற்றும் விசைப் படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வருகிறது.
இந்நிலையில், 2021 டிசம்பா் மாதம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடைச் சேர்ந்த 47 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பி உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்றனர். தனி வாகனங்களில் மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
ஜனவரி 25ம் தேதியே இலங்கை சிறையில் இருந்து வெளியான நிலையிலும், உணவு தண்ணீர் என அடிப்படை வசதிகள் செய்து தராமல் அவமதித்ததாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ராஜ மாணிக்கம் மீது மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.