அரசு கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்.!!
20 percentage extra admissions in government colleges higher education department minister info
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளதாவது:- "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக கொண்டு நமது இளைய சமுதாயம் உலகளவில் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உயர்கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற காரணத்தால் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட முத்தான திட்டங்களை வழங்கினார். அத்துடன், திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாக திறன் மேம்பாட்டு துறையின் மூலமாகவும் வழங்கி வருகிறார்.
இந்தத் திட்டங்களினால், கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் படி இந்த ஆண்டும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

இதை அறிந்திருந்த நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கல்வியாண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட ஆணையிட்டு, அந்த ஆணையின் படி கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும், உயர்கல்வி பயில பெருமளவில் மாணவர்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும், அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 15 சதவீதம் இடமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீதம் இடமும் உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பின் மூலம் இந்த ஆண்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மாணவர்களும் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.
English Summary
20 percentage extra admissions in government colleges higher education department minister info