ஈரோடு: 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.! எலக்ட்ரீசியனுக்கு 20 ஆண்டுகள் சிறை.!
14 year old girl raped electrician gets 20 years in jail in erode
ஈரோடு மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எலக்ட்ரீசியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பழைய பாளையம் ஓடைமேடு பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் சதீஷ் (35). இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இவருக்கு பவானியை சேர்ந்த கணவரை இழந்து மகளுடன் வாழ்ந்து வந்த வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு அந்தப் பெண்ணின் 14 வயது மகள் திடீரென காணாமல் போனார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், திருமண ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை சதீஷ் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சதீஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூபாய் 2 லட்சம் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.
English Summary
14 year old girl raped electrician gets 20 years in jail in erode