அசத்தல்...! கிண்டி அரசு மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய 10-ஆம் வகுப்பு மாணவன்...!
10th grade student arrives by ambulance from Guindy Government Hospital write his exam
சென்னையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையிலும், தனது கல்வியின் மீதான ஆர்வத்தால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவனின் விடாமுயற்சி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
ஈக்காட்டுத்தாங்கல் இ.சி.ஐ பள்ளியில் பயிலும் ரிஷிகேஷ் என்ற மாணவர், கடந்த 11-ஆம் தேதி தமிழ் தேர்வு எழுதியபோது கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.

மருத்துவப் பரிசோதனையில் அவருக்குக் குடல்வால் அழற்சி (Appendicitis) இருப்பது கண்டறியப்பட்டு, உடனடியாகக் கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நிலையிலும், ஆங்கிலத் தேர்வை எழுத வேண்டும் என்ற உறுதியுடன் இருந்த மாணவருக்குத் தேர்வுகள் துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் உரிய வசதிகளைச் செய்துகொடுத்தது.
இன்று காலை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அசோக் நகரில் உள்ள தேர்வு மையத்திற்கு வந்த மாணவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அவரால் எழுத முடியாத சூழல் இருந்ததால், அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் அவர் சொல்லச் சொல்ல விடைகளை எழுதினார்.
தேர்வு முடிந்ததும் மீண்டும் ஆம்புலன்ஸ் மூலமாகவே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த மாணவனின் கல்வி ஆர்வத்தை ஆசிரியர்களும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
English Summary
10th grade student arrives by ambulance from Guindy Government Hospital write his exam