தலைநகர் டெல்லியை புரட்டிப்போடும் மழை; ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்; பீதியில் மக்கள்..!
The Meteorological Department has issued a red alert for the capital Delhi
ஜூன் மாதம் தொடங்கிய எல் நினோவின் காரணமாக, இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெரும் வெப்பம் ஏற்பட்டது. இதனால், பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வறட்சி இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால், வடஇந்தியாவில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வெப்பம் வாட்டி வதைத்த சூழலில், தற்போது மழை, வெள்ளம் மக்களை சூறையாடி வருகிறது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள என்.சி.ஆர் பகுதிகளில், மிகக் கடுமையான மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக, டெல்லிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, டெல்லியில், இடியுடன் கூடிய கனமழை, இடி-மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் மிகக் கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு பருவமழைக் காற்றும், மேல் வளிமண்டலத்தில் நிலவும் 'மேற்கத்திய இடையூறும்' ஒரே நேரத்தில் ஒன்றிணைவதால், இவ்வாறு கனமழை பொழிவதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், மக்களை தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொடர் கனமழையின் காரணமாகத் தலைநகர் பகுதியில் வெப்பநிலையின் அளவு கணிசமாகக் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.
English Summary
The Meteorological Department has issued a red alert for the capital Delhi