'எங்கிருந்தோ வந்த எம்.எஸ். தோனி திடீரென்று கேப்டனானார்; SRH கேப்டனாக இஷான் கிஷன் கேப்டனாக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கவில்லை'; ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள யுவராஜ் சிங்..!
Yuvraj Singh has expressed his disappointment that MS Dhoni who seemingly came out of nowhere was suddenly appointed captain
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் அதிரடி வீரர் யுவராஜ் சிங் காம்போ என்பது எப்போதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமான ஒன்று. 2007 டி20 உலகக்கோப்பையில் ஒன்றாக சேர்ந்து போராடி உலகக்கோப்பையை வென்ற இவர்களிடையே, 2008-ஆம் ஆண்டு ஒருநாள் கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்ட போது விரிசல் ஏற்பட்டது உலகறிந்த விஷயம்.
இது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ள யுவராஜ் சிங், தான் ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்க விரும்பினேன் என்று தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.ஒரு கேப்டனாக தோனிக்கும், துணை கேப்டனாக எனக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் பல நேரங்களில் தெரிவித்து இருந்தார்.
அதாவது, தோனி இந்திய அணியில் அறிமுகம் ஆவதற்கு முன்பே நட்சத்திர இந்திய வீரராக இருந்த யுவராஜ் சிங், இவர் 2007 ஒருநாள் உலகக்கோப்பையில் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தபோது, உலகக்கோப்பை அணியின் துணைக்கேப்டனாக இருந்தார்.
ஒருநாள் உலகக்கோப்பையில் படுதோல்வியை சந்தித்த பிறகு டி20 உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்டபோது, ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக இருந்த யுவராஜ் சிங்கே டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சச்சின், கங்குலி, ராகுல் டிராவிட் போன்ற மூத்த வீரர்கள் விலகிக்கொள்ள தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்தசூழலில் தான் துணைக் கேப்டனாக இருந்த யுவராஜ் சிங், கேப்டன் பொறுப்பு எங்கிருந்தோ வந்த தோனியிடம் ஒப்படைக்கப்பட்டதாக தன்னுடைய 18 வருட ஏமாற்றத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்திய ஒரு போட்காஸ்டில் பேசிய யுவராஜ் சிங், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியில் பாட் கம்மின்ஸ் இல்லாதபோது அபிஷேக் சர்மா கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கவில்லை என வெளிப்படுத்தினார். அப்போதுதான் இந்த விசயத்தை தனக்கு கேப்டன் பதவி வழங்கப்படாமல், தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டதை ஒப்பிட்டு அவர் பேசியுள்ளார்.
அத்துடன், 2007-இல் நான் இந்திய அணியில் இருந்த போது, ஹர்பஜன், சேவாக் போன்றவர்கள் மூத்த வீரர்களாக இருந்தனர். அப்போது நான் துணை கேப்டனாக இருந்தேன். ஆனால், என்ன காரணங்களோ தெரியவில்லை, எங்கிருந்தோ வந்த எம்.எஸ். தோனி திடீரென்று கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
எம்.எஸ். தோனி கேப்டனாக்கப்பட்டபோது, அவர் இந்தியாவுக்காக கேப்டனாகப் பொறுப்பேற்று பெரிய சாதனைகளைச் செய்ய வந்தவர் போல இருந்தது. அது நடக்கத்தான் போகிறது என்றாலும், ஒரு சாதாரண வீரரின் கண்ணோட்டத்தில் இருந்து நான் சொல்வது என்னவென்றால், இத்தனை ஆண்டுகளாக ஒருவர் உங்களுக்காக இவ்வளவு செய்திருக்கும்போது, அவரை ஏன் கேப்டனாக நியமிக்கமில்லை. அது ஏமாற்றமளித்தது” என்று பேசியுள்ளார்.
அதேபோன்று, SRH கேப்டனாக அபிஷேக் சர்மாவிற்கு பதிலாக இஷான் கிஷன் கேப்டனாக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் ஏமாற்றம் அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''எனக்கும் இஷான் கிஷனை மிகவும் பிடிக்கும். இந்திய கிரிக்கெட்டில் அவரது வளர்ச்சியையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் வேறு அணியிலிருந்து வந்த ஒருவரை விடுத்து, ஹைத்ராபாத்திற்காக அனைத்தையும் கொடுக்கும் அபிஷேக் சர்மாவை கேப்டனாக்கி இருக்க வேண்டும்.
அப்போதுதான் ஒரு வீரர் கற்றுக்கொள்வார். கற்றுக்கொள்வதற்கு ஐபிஎல் ஒரு சிறந்த களம் என்று நான் நினைக்கிறேன். தகவல் பரிமாற்றம் முக்கியம் என்று நான் நினைக்கிறேன், ஆனால், யார் அந்த முடிவை எடுத்தார்கள், எந்த அடிப்படையில் எடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
நான் அபிஷேக் சர்மாவிடம் பேசினேன், இப்போது நாம் இந்த ஏமாற்றத்தை ஒதுக்கி வைக்கப் போகிறோம் என்று கூறினேன், அதற்கு அவர், ’நான் என்னுடைய கேப்டனுக்கு ஆதரவளித்து முன்பை விட இன்னும் சிறப்பாகச் செய்ய முயற்சிக்கப் போகிறேன், ஏனென்றால் ஏதோ ஒன்று என்னைப் பாதித்துள்ளது. இப்போது நான் இன்னும் கடுமையாக உழைத்து சிறப்பாகச் செய்வேன்’ என்று கூறினார்.
இந்த தருணத்தில் அதுதான் உங்களுடைய உந்துதலாக இருக்க வேண்டும்” என யுவராஜ் பேசியுள்ளார். இந்நிலையில் தோனிக்கு கேப்டன்சி கொடுக்கப்பட்டமை குறித்து தற்போது யுவராஜ் சிங் தற்போது தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது பேசும் பொருளாகியுள்ளது.
English Summary
Yuvraj Singh has expressed his disappointment that MS Dhoni who seemingly came out of nowhere was suddenly appointed captain